புருஷசிரேஷ்டரான ஜனமேஜயரே! அந்த ஸபையிலிருந்த துரியோதனன் சகுனியுடன் கூட அந்த சபையை முழுதும் வரிசையாக பார்த்தான்.
கௌரவ சிரேஷ்டனான துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில், இதற்கு முன் கண்டிராத தேய்வீக விஷயங்களை கண்டான்.
அந்த துரியோதன மஹாராஜன், ஒரு கால் அந்த சபை நடுவில் படிக தள வரிசையுள்ள இடத்திற்கு சென்று ஜலம் என்று நினைத்து மதி மயங்கி தன் வஸ்திரத்தை தூக்கி கட்டிக்கொண்டான்.
அதனால் துயரடைந்து யாருக்கும் முகம் காட்டாமல் அந்த சபையை சுற்றி திரிந்தான்.
பிறகு மேடு பள்ளம் தெரியாமல் தரையில் விழுந்ததனால், துயரமும், வெட்கமுமுற்று பெரு மூச்சு விட்டுக்கொண்டு, வெறுப்புடன் அந்த சபையில் சஞ்சரித்தான்.
அதன் பிறகு படிகம் போல தெளிந்த நீருள்ளதும், படிகத்தாமரைமலர்களால் சோபிப்பதுமாகிய வாவியை தரையென்று நினைத்து ஆடையோடு ஜலத்தில் விழுந்தான்.
அந்த துரியோதனன் ஜலத்தில் விழுந்ததை கண்டு மஹாபலசாலியான பீமசேனனும் வேலைக்காரர்களும் நகைத்தனர்.
தர்மராஜாவின் கட்டளையினால் அவனுக்கு வேலைக்காரர்கள் உயர்ந்த வஸ்திரங்கள் கொடுத்தனர். அவன் அவ்வாறிருக்கக் கண்டு மஹாபலசாலியான பீமசேனன் அர்ஜுனன் நகுல சஹதேவன் அனைவரும் சிரித்தனர்.
பொறாமைக்காரனான துரியோதனன் அவர்களுடைய பரிஹாஸத்தை பொறுக்கவில்லை.
தன் எண்ணத்தை வெளிக்காட்டாமலிருப்பதற்காக அவன் அவர்களை கண்ணெடுத்து பாராமல் இருந்தான்.
திரும்பவும் ஜலத்தை தாண்டுகிறவன் போல வஸ்திரத்தை தூக்கி கட்டிக்கொண்டு நிலத்தில் அடியை தூக்கிவைத்தான்.
அதனால் எல்லா ஜனங்களும் மறுபடியும் நகைத்தனர்.
படிக கதவினால் மூடப்பட்ட வாயிலை பார்த்து அதில் நுழையும் போது, துரியோதனன் தலையில் பட்டு கலங்கி நின்றான்.
அது போலவே, பெரும் படிக கதவுள்ள மற்றோரு வாயிலை கைகளினால் இடித்து திறக்கும் போது, வாயிலுக்கு வெளிப்பட்டு முன்னே விழுந்தான்.
மறுபடியும் அவன் திறந்திருந்த ஒரு வாயிலை அடைந்து அது முன் போன்றதே என்று நினைத்து அந்த வாயிலிலிருந்து திரும்பினான்.
ஜனமேஜய மஹாராஜாவே! அந்த துரியோதனன் ராஜன் அவ்விடத்தில் இவ்வாறு பல வகை ஏமாறுதல்களை அடைந்து பாண்டவர்களால் விடைகொடுக்கப்பற்று ராஜஸூயமென்னும் மஹாயாகத்திலுள்ள, அந்த ஆச்சரியமான ஸம்பத்தை பார்த்ததினால் துயரமுற்ற மனத்துடன் ஹஸ்தினாபுரத்திற்கு சென்றான்.
பாண்டவர்களின் செல்வத்தினால் கொதிப்புற்று அதையே நினைத்துக்கொண்டு செல்லுகின்ற துரியோதன ராஜனுக்கு கெட்ட எண்ணமுண்டாயிற்று.
ஜனமேஜயரே! பாண்டவர்கள் மனங்களித்து இருந்ததையும் அரசர்கள் அவர்களுக்கு வசப்பட்டு இருந்ததையும், குழந்தை முதல் எல்லா ஜனங்களும் அவர்களிடம் அன்பு வைத்திருந்ததையும், மஹாத்மாக்களான பாண்டவர்களின் சிறந்த மேன்மையையும் கண்டு திருதராஷ்டிரன் மைந்தனான துரியோதனன் நிறம்மாறி போனான்.
அவன் செல்லும் போது மனம் கலங்கி, சிறந்த புத்திமானான தர்மராஜருடைய அந்த ஒப்பற்ற ஐஸ்வர்யத்தையும் சபையையும் தனிமையில் நினைத்து கொண்டிருந்தான்.
திருதராஷ்டிரன் மைந்தனான துரியோதனன் அப்போது மதி கலங்கி அடிக்கடி பேசுகின்ற சகுனிக்கு மறுமொழி கூறவில்லை.
அவ்வாறு கலங்கி நின்ற துரியோதனனை கண்டு சகுனியானவன், "துரியோதனா ! பெருமூச்சு எரிகிறவன் போல சொல்லுகிறாய். இதற்கு காரணம் என்ன?" என்று கேட்டான்.
அதற்கு துரியோதனன், "மாமா! இந்த பூமி முழுமையும், மஹாத்மாவான அர்ஜுனனுடைய அஸ்திர ப்ரதாபத்தினால், ஜெயிக்கப்பட்டு, யுதிஷ்டிரனுக்கு உட்பட்டு போனதையும், யுதிஷ்டிரனுடைய அம்மஹாயாகம் அவ்வாறு நடந்ததையும் தேவர்களில் இந்திரன் போல, யுதிஷ்டிரன் மிகுந்த மஹிமையுள்ளவனாக இருந்ததை கண்டு பொறாமையால் நிரப்பப்பட்டு இரவும் பகலும் எரிக்கப்பட்டவனாக, ஆணி ஆடி மாசங்கள் வந்த போது, சிறிய தடாகம் வற்றுவது போல வற்றுகிறேன்.
பார். யாதவ சிரேஷ்டனான கிருஷ்ணனால் சிசுபாலன் கொல்லப்பட்டான்.
அந்த சபையில் அந்த சிசுபாலன் அடியை தொடரும் ஆண் பிள்ளை யாருமிலலாமல் இல்லாமல் போனான்.
பாண்டவர்களிடமிருந்து உண்டான தீயினால் சுடப்பட்ட அரசர்கள் அந்த குற்றத்தை பொறுத்தனர்.
அதை யார் பொறுக்க தகும்?
அந்த தகாத பெருங்காரியம் கிருஷ்ணனால் செய்யப்பட்டது.
மஹாத்மாக்களான பாண்டவர்களின் பராக்கிரமத்தினால் அது நிலைத்தது.
அதனாலே தான், ராஜாக்கள் பலவகை ரத்தினங்களை எடுத்து கொண்டு, வைஸ்யர்களை போல கப்பம் கட்டி, குந்தி புத்ரனான தர்மராஜாவை சேவித்தனர்.
அவ்வாறு தர்மராஜாவிடத்தில் ஜ்வலிப்பது போல பிரகாசித்த, அந்த ராஜ்ய லக்ஷ்மியை கண்டு, அந்த தகுதி பெறாத நான், பொறாமையின் கையில் அகப்பட்டு கொண்டு தாபமுற்று இருக்கிறேன்.
தீயிலாவது குதிப்பேன். விஷத்தையாவது குடிப்பேன். ஜலத்திலாவது விழுவேன். ஜீவிக்க மாட்டேன். உலகத்தில் பராக்ரமமுள்ள எந்த ஆண் பிள்ளை, எதிரிகள் விருத்தி அடைந்திருக்கவும், தான் குறைந்திருக்கவும் கண்டு பொறுப்பான்?
அவர்களுக்கு அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் வந்திருப்பதை கண்டு, இப்போது பொறுத்திருக்க நான் பெண்ணும் அல்ல. பெண் அல்லாதவனும் அல்ல, ஆணுமல்ல, ஆண் அல்லாதவனும் அல்ல,
பூமிக்கெல்லாம் ஈஸ்வரனாய் இருப்பதையும், அப்படிப்பட்ட தன ஸம்பத்தையும், அவ்வகையான யாகத்தையும் கண்டு, என் போன்றவன் எவன் தாபமடையாமல் இருப்பான்?
நான் ஸஹாயமின்றி அந்த ராஜ்யலக்ஷ்மியை அபகரிப்பதற்கு சக்தனல்லேன்.
ஸஹாயம் யாருமிருப்பதாகவும் தெரியவில்லை. ஆதலால், இறப்பதை பற்றியே நினைக்கிறன்.
யாராலும் கெடுக்கப்படாத பரிசுத்தமான ஐஸ்வர்யம் குந்தி புத்திரனிடம் இருப்பதை கண்டு, தெய்வமே (விதி) வலியதென்றும், முயற்சி பயனற்றதென்றும் நினைக்கிறன்.
ஸுபல புத்திரனே! முதலிலேயே அவனை அழிப்பதற்கு நான் முயன்றேன்.
அவற்றை எல்லாம் கடந்து ஜலத்தில் தாமரை போல அவன் வளர்ந்து கிளம்பினான்.
அதனால் விதியே பெரியதென்றும் முயற்சி பயனற்றதென்றும் நினைக்கிறன்.
திருதராஷ்டிரன் புத்திரர்கள் குறைந்து போகின்றனர்.
பாண்டவர்கள் நாளுக்கு நாள் விருத்தியாகின்றனர்.
கிருஷ்ணன் அவர்களிடம் அன்பு கூர்ந்து அவர்களுக்கு செல்வங்களை விருத்தி செய்கிறான்.
ஆதலால், நான் அந்த ஐஸ்வர்யத்தையும் அவ்வகையான அந்த சபையையும் காவலாளிகள் செய்த அந்த பரிஹாசத்தையும் பார்த்து தீயினால் சுடப்படுவது போல சுடப்படுகிறேன்.
மாமா! மிக துயரமுற்ற என்னை இப்போது நீ விட்டு விடு. எனக்குள்ள ஆற்றாமையை திருதராஷ்டிரருக்கு தெரிவி" என்று சொன்னான்.