பேரழிவை ஏற்படுத்திய பாரத போருக்குப் பிறகு, தனது 100 மகன்களையும் இழந்த த்ருதராஷ்டிரருக்கு விதுரர் ஆறுதல் கூறினார்.
பரசுராமர், நாரதர், வியாசர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோர் அறிவுரை சொல்லியும் கேட்க மறுத்தேனே என்று வருந்தினார்.
பின்னர், விதுரர் த்ருதராஷ்டிரரை இவ்வாறு சமாதானம் செய்தார்.
அரசே, எழுந்திருங்கள். ஏன் இப்படிப் சோகப்பட்டு படுத்து இருக்கிறீர்கள்? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்துங்கள். இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தைரியத்தால் தான் வாழ்கின்றன.
கூடியவர்கள் அனைவரும் ஒருநாள் பிரிந்து தான் ஆக வேண்டும். சேர்த்த புகழ் எல்லாம் ஒருநாள் மறையத்தான் செய்யும். சந்தித்தவர்கள் ஒருநாள் பிரியத்தான் போகிறார்கள். அது மட்டுமா. இருப்பவர்கள் வாழ்க்கை அனைத்து மரணத்தில் தான் முடிய போகிறது.
வீரனையும் மரணம் விட்டுவிடாது. கோழையையும் மரணம் விட்டுவிடாது. ஓ பாரதா, நிச்சயம் வரும் மரணத்தை, உன்னத க்ஷத்திரியர்கள் ஏன் சண்டையிட்டு ஏற்கக்கூடாது?
போர் செல்லாதவன் கூட ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். போருக்கு செல்பவன் அனைவரும் மரணிப்பதும் இல்லை. மரணம் avaravar காலத்தை பொறுத்தது. யாரும் தங்கள் விதிக்கப்பட்ட நேரத்தை மீறவும் முடியாது.
பிறப்பதற்கு முன் எங்கோ இருந்தவன், இறந்த பிறகு எங்கோ சென்று விடுகிறான். எனவே இயற்கையாகவே தோன்றி மறையும் விஷயத்தை கண்டு, ஏன் வருத்தப்பட வேண்டும்?
துக்கப்படுகிறான் என்பதால், இறந்தவன் திரும்பி வர போவதில்லை, துக்கப்படுபவனும் இறந்தவனோடு இறப்பதுமில்லை.
இப்படி தான் உலகம் செல்கிறது என்று பார்க்கும் போது, நீங்கள் ஏன் துக்கப்படுகிறீர்கள்?
காலம் எல்லா உயிரினங்களையும் பல வழிகளில் மரணத்தின் பக்கம் இழுக்கிறது. குருவம்சத்வரே!, காலம் எந்தப் பாரபட்சத்தையும் வெறுப்பையும் யாரிடமும் காட்டாது.
காற்று புல்வெளிகளை சிதறடிப்பது போல, காலம் அனைத்து உயிர்களையும் இழுத்து செல்கிறது.
அனைவரும் மரணத்தை நோக்கி ஒரே பாதையில் தான் பயணித்துகொண்டு இருக்கிறோம். அதில் ஒருவர் முதலில் இலக்கை அடைந்து விட்டார். அதை பார்த்து, மற்றவர்கள் ஏன் துக்கப்பட வேண்டும்? ஒருநாள் நாமும் அந்த இலக்கை அடையத்தானே போகிறோம்.
அரசே, போரில் இறந்தவர்களுக்காக நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் வேதங்களை அறிந்தவரல்லவா! போரில் வீர மரணம் அடைந்தவர்கள், சொர்க்க உலகத்தை அடைந்துவிட்டார்கள். மறவாதீர்கள்.
மரணத்தை தழுவிய அனைவரும் கற்றறிந்தவர்கள், சரித்திரம் உடையவர்கள், எதிரியை எதிர்கொண்டு வீர மரணத்தை ஏற்றவர்கள். அவர்களை நினைத்து ஏன் துக்கப்பட வேண்டும்?
அவர்கள் உங்கள் வாழ்க்கையில் சிறிது காலம் இருந்தார்கள், இப்போது போய்விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் உண்மையிலேயே உங்களுடையவர்கள் அல்ல, நீங்களும் அவர்களுடையவர்கள் அல்ல. இதை உணரும் போது ஏன் புலம்ப வேண்டும்?
இறக்கும் போர்வீரன் சொர்க்கத்தைப் பெறுகிறான்; வெற்றி பெறுபவன் புகழைப் பெறுகிறான். போரில் இரண்டு பக்கமும் உண்மையில் எந்த இழப்பும் இல்லை.
இந்திரன், போரில் வீர மரணத்தை அடைந்தவர்களுக்கு, சொர்க்க உலகங்களைத் தயாராக திறந்து வைத்து இருக்கிறான். பாரதரே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாகிவிட்டனர்.
தியாகங்களினாலோ, தானம் செய்வதினாலோ, தவத்தினாலோ, கல்வியினாலோ கூட சொர்க்கம் கிடைப்பது நிச்சயம் என்று சொல்ல முடியாது. ஆனால், போரில் இறக்கும் வீரன் சொர்க்கத்தை அடைவது போல, மற்ற மனிதர்கள் சொர்க்கத்தைப் எளிதில் பெறுவதில்லை.
போர் வீரன் தன்னுடைய நெருப்பு போன்ற தன் உடலில் அம்புகளை ஒரு புனித யாகம் செய்வது போல ஏற்கிறான். ஒவ்வொருவரும் அம்புகளையே அக்னிக்கு ஆகுதி கொடுப்பது போல கொடுக்கின்றனர்.
அரசே, போரில் வீர மரணமே, சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் உன்னதமான பாதை. ஒரு க்ஷத்திரியனுக்கு, போரில் இறப்பதை விட பெரியது எதுவுமில்லை.
உங்கள் பிள்ளைகள் உன்னதமானவர்கள், வீரம் மிக்கவர்கள், போரில் அற்புதமானவர்கள். அவர்கள் உயர்ந்த கதியை பெற்றனர் - அவர்கள் நினைத்து நீங்கள் துக்கப்படக்கூடாது.
சிறந்தவரே, உங்கள் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். துக்கத்தால் மூழ்கி, உங்கள் வாழ்க்கைக்கு முடிவை தேடி கொள்ளாதீர்கள்.
ஆயிரக்கணக்கான பெற்றோர்களை, நூற்றுக்கணக்கான மகன்களை, மனைவிகளை, எண்ணற்ற முந்தைய பிறவிகளில் பார்த்தாயிற்று. உண்மையில் யார் யாருக்கு சொந்தம்?
ஆயிரக்கணக்கான துக்கங்களும், நூற்றுக்கணக்கான பயமும், இந்த உண்மையை அறியாமல் இருப்பதால் தான் தோன்றுகிறது. ஆனால் ஞானிகள் இந்த சோகத்தில் சிக்குவதில்லை.
அரசே, காலம் யாரையும் நேசிப்பதுமில்லை, வெறுப்பதுமில்லை. காலம் எப்பொழுதும் நடுநிலையானது. காலம் எல்லாவற்றையும் முன்னோக்கி செலுத்துகிறது.
காலமே எல்லாவற்றையும் பழுக்க வைக்கிறது. அந்த காலமே பிறகு அந்த உயிரினங்களையும் அழிக்கிறது. நாம் தூங்கினால் கூட, காலம் எப்போதும் விழித்திருக்கிறது. காலம் உண்மையிலேயே யாராலும் தடுக்க முடியாததாக இருக்கிறது.
இளமை, அழகு, வாழ்க்கை, செல்வம், ஆரோக்கியம் மற்றும் அன்பான உறவுகள் கிடைக்கின்றன. ஆனால், இவை எதுவும் நிரந்தரமானவை அல்ல. அதை உணர்ந்த ஞானிகள் இவற்றை விரும்புவதில்லை.
உங்கள் ராஜ்யம் போய் விட்டதே என்று நீங்கள் துக்கப்படக்கூடாது. நீங்கள் துக்கமடைந்தாலும், நடந்தது நடந்து விட்டது என்பதே உண்மை.
எந்த நிலையிலும் முயற்சியுடனும் தைரியத்துடனும் செயல்பட்டால், துக்கத்திலிருந்து மீண்டு வர முடியும். துக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதே சிறந்த தீர்வு.
துக்கத்தை மனதில் வைத்து இருக்கும் வரை, அது நீங்கவே நீங்காது. துக்கம் மனதில் இருக்க இருக்க, உண்மையில் இன்னும் துக்கம் அதிகமாகிறது. பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும் போதும், நமக்கு பிடித்தமானவர்கள் பிரியும் போதும், துக்கம் எழுகிறது.
தெளிந்த ஞானம் இல்லாதவர்கள், இது போன்ற நிலையில், மன துக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஞானிகள் இதனால் மனசோர்வு அடைவதில்லை. துக்கப்படுவதால் செல்வமோ, நல்லொழுக்கமோ, மகிழ்ச்சியோ கிடைக்கப்போவதில்லை.
துக்கம் எந்த நோக்கத்திலும் வெற்றியைக் கொண்டு வராது, துக்கம் ஒருவனின் நல்லொழுக்கம், செல்வம் மற்றும் இன்பம் என்ற இந்த மூன்று புருஷார்த்தங்களையும் அடைய விடாமல் தடுத்து விடும்.
உலக ஆசைகளில் சிக்கிய மக்கள், ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறார்கள். அதிருப்தி அடைந்தவர்கள் குழப்பத்தில் விழுகிறார்கள், அதே நேரத்தில் மனத்திருப்தி அடைந்தவர்கள் அமைதியைக் அனுபவிக்கிறார்கள்.
உண்மையை உணர்ந்த ஞானிகள், ஞானத்தால் மன துக்கத்தையும், மருந்துகளால் உடல் நோயையும் அழித்து கொள்கிறார்கள்.
இதுவே அறிவின் பலம். முதிர்ச்சியடையாதவர்கள் இந்த ஞானத்தை அடைய முடியாது. கடந்த கால செயல்களின் விளைவு அதாவது கர்ம வினை, ஒரு நபர் தூங்கினாலும், நின்றாலும், ஓடினாலும் பின்தொடர்கிறது.
ஒருவர் எந்தச் செயல்களைச் செய்தாலும் - அது நல்லதோ அல்லது கெட்டதோ, ,அந்தந்தச் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிக்கிறார்கள்.
ஒருவர் ஒரு செயலைச் செய்கிறானோ, அதற்கான பலனை அந்த உடல் அனுபவிக்கிறது. ஆத்மாவோ, அனைத்துச் செயல்களுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது.
நல்ல செயல்களிலிருந்து மகிழ்ச்சியும், கெட்ட செயல்களிலிருந்து துக்கமும் வருகிறது. எப்படிப்பட செயல், எங்கு செய்யப்பட்டாலும், விளைவுகள் அதன்படி நிச்சயமாக கிடைக்கும்.
செயல் இல்லாமல் எந்தப் பலனும் கிடைக்காது. உண்மையை உணர்ந்த ஞானிகள் ஒருபோதும் அறிவுக்கு எதிரான, தீங்கு விளைவிக்கும் மற்றும் நல்வாழ்வின் வேர்களை அழிக்கும் செயல்களில் தங்களை ஒருபோதும் இணைத்துக் கொள்வதில்லை.
இவ்வாறு விதுரர் ஆறுதல் சொல்ல, சமாதானம் அடைந்த த்ருதராஷ்டிரர் மேலும் பல தர்ம விஷயங்களை கேட்டார்.
வியாச மஹாபாரதம்
ஸ்த்ரீ பர்வம்